செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஜென் காதல் -2




இனி
உடை உடுத்தும் போது
என்னை நினைத்துக் கொள்.

காகம் கத்தியது
அதற்குத் தெரியாது
உன்னைத் தவிர
எனக்கு வேறு
சொந்தம் இல்லையென்று.

உன் காலடித்தளத்தில்
தாமரை பூக்கக்
கண்டிருக்கிறேன்.

காதல் சந்திப்பை
கடந்து சென்றுவிட்டது
நாம் பயணிக்கும் ரயில்
சந்திப்பில் இறங்கியவர்களை
இனி எப்போது சந்திப்போம்.

குடை கொண்டு
வந்தால் கூட
எல்லை மீற
சமயம் பார்க்கிறது
மழை.

தாழிடப்பட்ட
கதவின் உள்ளே
நானும்
அவள் நினைவுகளும்.

அவிழ்ந்த கூந்தலில்
அவளைப் பார்க்கையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
மனதில் சிறகடிக்கும்.

வருடங்கள் விரைந்தோடுகிறது
கனவில் முத்தமிட்டு
மறைந்து போனவள்
இனி எப்போது வருவாள்.

அந்தியில் ஆயத்தமானேன்
என்னவளை வரைவதற்கு
விடியலுக்குள் ஓவியம்
உயிர் பெற்றுவிடுமா.

காதலிக்கும் போது
குளத்துநீர் தெளிவாயிருந்தது
கல்யாணத்திற்கு பிறகு
களையும்பூண்டும்
மிகுந்துவிட்டது.

தலையை நீட்டாதே
பாழும் கிணற்றிலிருந்து
யாரேனும்
பார்த்துவிடுவார்கள்
உன்னை.

உனக்காக
நதிக்கரையில் காத்திருந்தேன்
தோன்றிய கணமே
மறைந்துவிடுகின்றன
நீர்க்குமிழிகள்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக